தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

தாறுமாறாக ஓடி சாலையின் இடதுபுறமாக இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் கடுமையாக சேதமடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.