Skip to content
Home » போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் , அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் காந்திமதி நாதன், அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேனேஜர் விசாலி ஆகிய 2 பேரும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில், “தமிழ்நாடு கிராம வங்கியில், கடந்த 2022 ம் ஆண்டு மார்ச்.1 ஆம் தேதி முதல் செப்.30 ஆம் தேதி வரை அருந்தவபுரம் திருகோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (54) என்பவர் தனது பெயரிலும், தனது மனைவி பவானி, மற்றும் பவானியின் அம்மா லட்சுமி ஆகியோர் பெயரிலும் 19 தவணைகளாக 172 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட, கில்ட் நகைகளை அடகு வைத்து, 44.65 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

அதேபோல் பெடரல் வங்கியில், ரமேஷ் தனது பெயரிலும், தனது மனைவி பவானி மற்றும் தன்னிடம் வயல் வேலை பார்த்த அபூர்வம் என்பவருடைய பெயரிலும் 8 தவணைகளாக 85 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட கில்ட் நகைகளை அடகு வைத்து 24.34 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதில் நடவடிக்கை தேவை” என கோரியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த ரமேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அவரை புதுச்சேரியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மன்னார்குடியைச் சேர்ந்த முருகையன் (49) என்பவர் கும்பகோணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் கவரிங் நகை செய்பவர்கள் மூலமாக நகை செய்து, மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் பல தனியார் நகை அடகு கடை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்துள்ளார். அவருடன் ரமேஷூக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், முருகையனுடன் இணைந்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!