சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து எழும்பூர் கண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பருவகால மாற்றத்தின் போது மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பரவுவது வழக்கமானது. தற்போது மெட்ராஜ் ஐ வேகமாக பரவுகிறது. கடந்த ஜூலை மாதம் 78 பேரும், ஆகஸ்டு மாதம் 248 பேரும் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்த மாதம் இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளி குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு வருகிற 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை இலவச கண்பரிசோதனை செய்யப்படும். * கண் வலி மற்றும் கண் சிவந்து போகும். *கண்களில் நீர் வழியும். *கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல். *கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளும். *இது பருவநிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் வரக்கூடியது.
*ஒருவரை நேடியாக பார்ப்பதினால் வராது. *குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது அதனால் அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கருவிகளை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. *கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும் *கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும். *சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடையவைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.