தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச்.6ம் தேதி, வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றில், கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபரிடம், இளைஞர் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இதில், முதலீடு செய்யும் பணத்துக்கு நானே பொறுப்பு என்று கூறி மூளைச்சலவை செய்துள்ளார். அந்த மர்ம நபர் சொன்னதை நம்பி இளைஞரும் பல தவணையாக சுமார் 69.85 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோர்.
இந்நிலையில், நான்கு மாதங்கள் கடந்த நிலையில், முதலீடு செய்த பணத்துக்கு லாபமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இளைஞர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய நபரின் மொபைல் எண்ணுக்கு தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால், போன் சுட்ச் அப் என வந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், ஏ.டி.எஸ்.பி., முத்தமிழ் செல்வன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைன் செயலியில் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் மெசேஜ் அனுப்பி வருவதால், உங்களது வங்கி கணக்கு எண் ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்க கூடாது இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும் எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.