சனாதனம் பேச்சு குறித்த சர்ச்சை; உதயநிதி ஸ்டாலின் தலைக்கு10 கோடி அறிவித்த அயோத்தி சாமியாருக்கு கடும் எதிர்ப்பு; பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்:
சனாதனம் ஒழிப்பு குறித்து பேசிய, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவேற்கு, 10 கோடி
ரூபாய் தருவதாக உ.பி சாமியார் கூறிய சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும்,கோபத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் நாகையில் இன்று திமுகவினர் உ.பி சாமியாரின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு, திமுக நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான இரா.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சாமியாரின் உருவ படத்தை ஊர்வலமாக எடுத்து வந்த திமுகவினர், துடைப்பக்கட்டையால் அப்படத்தை ஆத்திரம்தீர அடித்தனர். பின்னர் பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப் படத்திற்கு தீ வைத்து கொழுத்திய திமுக தொண்டர்கள் அங்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அப்போது சாமியாரை கண்டித்து திமுகவினர் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.