பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ராயியா கிராமத்தில் ‘முட்டாள் கிளப்’ என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்பட கூடிய ஊழல், போதை பொருள், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விசயங்களுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த சூழலில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பேய் முகமூடி அணிந்திருந்தனர். அதில், சமூகத்திற்கு தீங்கு தரும் மேற்கூறிய விசயங்களை பதிவு செய்தபடி, கருப்பு உடை அணிந்தும், தகன மேடையில் கேக் வெட்டியும் 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் நிகழ்வை கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர். சமூக நலன்களுக்கு எதிரான விசயங்களை எதிர்த்து போராடும் நோக்கில் இந்த கொண்டாட்டம் நடத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீந்தர் ரிக்கி என்பவர் இதனை உருவாக்கினார். அப்போது, தகன மேடையில் புது வருட பிறப்பை கொண்டாடினார். அதனை நினைவுகூரும் வகையில் இந்த வருடமும் தகன மேடையில் புது வருட பிறப்பு கொண்டாடப்பட்டு உள்ளது.