மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோவில் உள்ளது. இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுரவர்களால் பாடல் ஸ்தலமாகும். அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற ஸ்தலமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில்
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் சீரிய முயற்சியால் ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் திருப்பணி வேலைகள் நிறைவடைந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் 123 குண்டங்கள் அமைக்கப்பட்டு மயிலாடுதுறை புகழ்பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில் வேதியர்கள் மந்திரம் முழங்க கடங்களில் புனித நீர் நிரப்பபட்டு கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மனி ஆகிய ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் 9 கடங்களில் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று 8ஆம் கால யாகசாலை பூஜை திருவாடுதுறை ஆதினமடாதிபதி முன்னிலையில் நிறைவுற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூராணஹூதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்கள் ஒலிக்க சிவாச்சாரியார்களால் கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுர கலத்தை அடைந்தது. திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதிகள், ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 88 கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள், சிவனடியார்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.
மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி ஜெயசந்திரன் மேற்பார்வையில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை அடங்கிய போலீசார் 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேக விழாவில் அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.