நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம்(செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடைபெறும். விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து
தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக சென்னை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர் ஓரியூர் ,திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குழுவாக யாத்திரிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குழந்தை இயேசுவையும், மாதா சொரூபங்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். காவி உடையுடன் கடந்த சில நாட்களாக நாகை பகுதிகளில் காவி உடை அணிந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வேளாங்கண்ணி மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் சாலையோரங்களில் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இதனால் பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் கொண்டுள்ளது.