குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் கர்நாடக அரசு தமிழகத்திற்க தர வேண்டிய தண்ணீரை தரவில்லை.. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியது. கர்நாடக அரசின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாட்டில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன், துரை. ரமேசு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹீமாயூன் கபீர், மணி செந்தில், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன் , தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி அகமது கபீர், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வம், ஆழ்துளைக் கிணற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்க, விவசாய சங்க நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.