கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனி பகுதியில் உள்ள தம்பு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் அபிநயா மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்சினி ஆகியாரை இன்று மாலை அவர்களது தாத்தா ராமசாமி தனது டிவி.எஸ்.50 இருசக்கர வாகனத்தில் வீரபாண்டிபிரிவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பள்ளியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்துடன் 3 பேரும் பேருந்தின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயமடைந்துள்ள 3 பேரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தையடுத்து மேல் சிகிச்சைகாக மூவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்துவிட்டு வரும் வழியிலேயே தாத்தா ராமசாமி மற்றும் பேத்தி ஹேமவர்சினி ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்றொரு பேத்தி அபிநயா சிகிச்சைக்காக அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார். இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.