Skip to content

பிபோர்ஜாய் பெரும் சேதம் ஏற்படுத்தும்…. மக்கள், கால்நடைகள் வெளியேற்றம்

  • by Authour

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிபோர்ஜோய்’ புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குஜராத்தின் ஜக்காவ் துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிதீவிர புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. மும்பையில் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. அதில் 4 பேர் சிக்கினார்கள். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையே புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் குஜராத்தின் கட்ச், துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.  கடற்கரையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். சுமார் 2 லட்சம் கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ‘பிபோர்ஜோய்’ புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து குஜராத்தை சேர்ந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, புருசோத்தம் ரூபலா, தர்சன் ஜர்டோஷ், மகேந்திர முன்ஞ்பாரா உள்பட 5 மத்திய மந்திரிகளை கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்பேரில் 5 மத்திய மந்திரிகளும் குஜராத் விரைகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!