தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, ஆங்காங்கே ரெட் சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதற்கான பல பணிகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலையாக விளங்குகிறது. நாஞ்சிக்கோட்டை சாலையானது பைபாஸ், ஈபி காலனி, கருணாநிதி நகர்,ஆவின் பால் பண்ணை, பர்வீன், அண்ணாநகர்,உழவர் சந்தை, கல்லுக்குளம், மேரீஸ் கார்னர், கான்வென்ட், ரயிலடி, ஆற்றுப்பாலம், பழைய பேருந்து நிலையம் வரை 12 பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.
தஞ்சையின் மிக முக்கிய பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பரபரப்பான
சாலையாகவும் இருந்து வருகிறது. இரவு 11 மணி வரையிலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்நிலையில் நாஞ்சிக்கோட்டை பைபாஸ், கருணாவதி நகர்,ஈ.பி காலனி, ஆவின் பால் பண்ணை, பர்வின் வரை சுமார் 3.கி.மீ தூரத்திற்கு முறையான மின் விளக்கு வசதி அமைக்கப்படாமலே இருக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பலமுறை இதன் காரணமாக விபத்துகளும் நடந்துள்ளது என அப்பகுதி சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.