திருச்சி சஞ்சீவி நகர் பொன்மணி நகரை சேர்ந்தவர் கருக்குவேல் ராஜன்(44) தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் 2மணிக்கு கருக்குவேல் ராஜன் கடையில் இருந்தபோது உறவினர் சரவணன் அங்கு வந்து கருக்குவேல்ராஜனை அழைத்து சென்றார்.
வழியில் இருவரும் தேவதானம் ரயில்வே கேட் அருகில் உள்ள மதுபான பாருக்கு சென்று மது குடித்தனா். அப்போது பாரில் தேவதானம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(42), பனையக்குறிச்சி கண்ணாயிரம் என்கிற நாகராஜ் (32),ராஜ்(35) ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
போதையில் இருந்த சுப்பிரமணி பாரில் சவுண்ட் விட்டு ரவுண்டு கட்டினார். இதைப்பார்த்த கருக்குவேல் ராஜன் அமைதியாக . இருக்கும்படி கூறினார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் சுப்பிரமணி பீர் பாட்டிலை எடுத்து கருக்குவேல் ராஜன் மீது சரமாரி குத்தினார். இதை தடுக்க முயன்ற சரவணனுக்கும் குத்து விழுந்தது.
உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் கருக்குவேல் ராஜன் இறந்தார். சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, நாகராஜ், ராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களில் சுப்பிரமணி தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது.