திருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது:
திருச்சி உறையூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருச்சி உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் 2 நாள்களாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 11,000 பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது புதை வடிகால் திட்டப்ப பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்கன் தெரு, மின்னப்பன் தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்கிழமை முதல் குடிநீர் குழாய் மூலமாக வழங்கப்படுகிறது. அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
