முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா என்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், “தெருவில் செல்பவர்” என்றும் கூறினார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 3 வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை வேண்டுமென்றே அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசுகிறார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.”இந்த வழக்கில் உரிய தண்டனை வழங்கப்படும் என நம்புகிறேன்,”
இவ்வாறு கே. சி. பழனிசாமி கூறினார்.
இந்த வழக்கு வரும் மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.