கோவை, சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த அவர் கடையில் உள்ள பொருட்களை மினி லாரி மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் என்ற வாலிபரும் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அறையில் ஷியாம் டி.வி யில் அதிக சத்தம் வைத்துக் கொண்டு நிகழ்ச்சியை பார்த்ததாக
கூறப்படுகிறது.
இதனால் தூங்கிக் கொண்டு இருந்த ஆறுமுகம் எழுந்து அவரிடம் சத்தத்தை குறைக்குமாறு கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. திடீரென சியாம் அங்கு கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் தரமாரியாக தாக்கி உள்ளார்.
இதனால் அலறிய ஆறுமுகம் அங்கேயே மயங்கி சரிந்து உள்ளார். ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் போலீசார் மற்றும் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது அவர்கள் சென்று பார்த்த போது ஆறுமுகம் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்து உள்ளார். ஷியாம் உடனே அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆறுமுகத்தை அங்கு இருந்துவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 3 மணிக்கு இறந்து விட்டார்.
சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஷியாம் தேடி வருகிறார்கள். ஷியாம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் கேரளாவில் இருந்து இங்கு வந்து வேலைக்கு சேர்ந்து உள்ளார். அவர் மீது சில வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியும் என போலீசார் கூறினர். இதைதொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடந்து வருகிறது.