திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில் மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது துணை மேயர் ஜி. திவ்யா, மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
• நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில், அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (Food Street) தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள், வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில், தலா ரூ.2 கோடி வீதம், கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
• விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
• இம்மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 4000 எண்கள் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
கீழ்க்கண்ட பணிகள் மாண்புமிகு நகர்ப்புற அமைச்சர்கே. என். நேரு வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்
• பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.