தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா இன்று திருவரங்குளம் ஊராட்சியில் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சுகாதாரமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் வகுப்புக்கு சென்று கற்றல், கற்பித்தல் திறன் குறித்து ஆய்வு செய்தார். கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி அந்த வார்த்தைகளை சொல்லும்படி குழந்தைகளிடம் கேட்டார்.
அதைத்தொடர்ந்து வம்பன் கிராமம் சென்று அங்குள்ள பயறு விதை பெருக்கு பண்ணை வளாகத்தில் விதைகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.