Skip to content

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர்
காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். தைக்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்துவிட்டு கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்தவர்கள் ஒருவர் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறைக்குதகவல் தெரிவித்தனர். திருநெல்வேலி டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணையை துவக்கினர்.

திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார்.

காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக, ஜாகிர் உசேன்  மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கு இடப்பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதற்கிையே இந்த கொலை தொடர்பாக 2பேர்  சரண் அடைந்து உள்ளனர்.

 

error: Content is protected !!