மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி.
இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு காரணமாக 3 மாத கர்ப்பிணியான தேவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டார்.
ஆனால் அதன் பின்னரும் சரவணன் அடிக்கடி தேவியை வீட்டின் கொல்லை புறத்தில் சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி தேவி அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் . போலீஸார் நடத்திய. விசாரணையில், சரவணன் சரிவர வேலைக்கு செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்து வந்ததால் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், திருப்புங்கூரில் தந்தை வீட்டில் தங்கியிருந்த தேவியை சம்பவத்தன்று சந்தித்த சரவணன் அவரை தாக்கி, தலையை சுவற்றில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும், இதில், தலையில் பலத்த காயமடைந்த தேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.
இந்த கொலைவழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார். வழக்கினை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தமது தீர்ப்பில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.