இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் கடந்த 10 மாதமாக விண்வெளியில் தங்கி உள்ளார். அவர் இந்திய நேரப்படி நாளை அதிகாலை மணி பூமிக்கு திரும்புகிறார்.
அவரை அழைத்து வர அமெரிக்காவின் கென்னடி விண்வௌி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 4.33 மணிக்கு டிராகன் என பெயரிடப்பட்ட விண்கலம் பால்கன் 9 என்ற ராக்கெட்டில் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
விண்கலத்தில் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், டகுயா ஒனிஷி மற்றும் கிரில் பெஸ்கோவ் ஆகிய வீரர்கள் சென்றுள்ளனர். இந்த வீரர்கள் நேற்று அதிகாலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வௌி மையத்தை சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த நான்கு விண்வௌி வீரர்களும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் செய்து வரும் ஆய்வு பணிகளை தொடர உள்ளனர். சர்வதேச விண்வௌி நிலையத்தை சென்றடைந்த 4 வீரர்களும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வௌிப்படுத்தி கொண்டனர்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் நாளை அதிகாலை 3. 27 மணிக்கு பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19ம் தேதி அதிகாலை (3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.