தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும் இன்று காலை சபாநாயகர் அப்பாவு தான் அவையை நடத்தினார்.
அவர் திருக்குறளை வாசித்து சபை நடவடிக்கையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. எம். செரியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராசிபுரம் சுந்தரம், கோவிந்தராஜூலு, குணசீலன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் கேள்வி நேரத்தை தொடங்கி வைத்தார். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.
கேள்விநேரம் முடிந்ததும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். திமுகவுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்து விடும்.
முன்னதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது அதிமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டமன்றத்தில் உள்ள எடப்பாடி அறையில் அதிமுக உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கடந்த 14ம் தேதி எடப்பாடி அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். இன்று 2ம் நாளாக புறக்கணித்தார்.
அரே நேரம் சட்டமன்றத்தில் செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். செங்கோட்டையனுக்கு இன்னொரு புறம் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்.