திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (55). தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சத்தியசுந்தரி (49). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதமாக சண்முகம் மூச்சுத் திணறல் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் அதிகரிக்கவே, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன், அவரது நான்காவது மகளான தேநீர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 கணினி அறிவியல் பிரிவில் படிக்கும் ஷாலினி (15) உடன் இருந்தார். தனது உயிர் பிரியும் தருவாயில் மகள் ஷாலினியை அருகில் அழைத்த சண்முகம், ‘கல்விதான் உன்னை உயர்த்தும். எனவே நீ நன்றாக படிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
அடுத்த சில மணிநேரத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. தனது தந்தையின் உடல் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பிணவறையில் இருக்கும் நிலையில், இன்று காலை தனது இல்லத்திற்கு வந்த ஷாலினி, தனது சீருடைகளை அணிந்து கொண்டார்.
அவர் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள, பெல் பாய்லர் வளாகத்தில் உள்ள பாய்லர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தேர்வெழுதினார். இது குறித்து ஷாலினியிடம் கேட்டபோது, “எனது தந்தை இறக்கும்பபோது ‘நீ நன்றாக படி’ என்று கூறினார். அவரது சொல்லை நிறைவேற்றும் வகையில் நான் தேர்வெழுத வந்தேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். தந்தை இறந்தநாளில், மகள் பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.