இந்தியாவில் வரும் 2026ம் தேதி மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மறுவரையறை செய்யப்படும்போது, வட மாநிலங்களில் , குறிப்பாக உ.பி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தொகுதி அதிகரிக்கப்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்படலாம். அல்லது இதே அளவில் நீடிக்கலாம். இதே நிலைதான் தென் மாநிலங்கள் அனைத்துக்கும் ஏற்படும்.
வட மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்தி விட்டு தமிழகத்தில் உயா்த்தாவிட்டால், தமிழகத்தின் குரல் மக்களவையில் குறைந்து விடும். தற்போதைய நிலையிலேயே தமிழகத்திற்கான எந்த கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. தொகுதிகள் எண்ணிக்கை வட மாநிலங்களில் உயர்ந்து விட்டால், மத்திய அரசின் பார்வையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமாகி விடும்.
இதை தடுப்பது குறித்து கடந்த 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தை பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக எதையோ செய்யப்போகிறது என்பது உறுதியாகி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
எனவே இதனை தடுக்க தென் மாநில முதல்வர்கள் மற்றும் தென்மாநில முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் இதற்கான கூட்டத்தை வரும் 22ம் தேதி சென்னையில் கூட்டி உள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநில முதல்வா்களுக்கும், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை நேரில் விடுப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அமைச்சர், ஒரு எம்.பியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அதன்படி ஒடிசா மாநிலத்துக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் இன்று காலை புவனேஸ்வர் சென்று முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தனர்.
அவர், அமைச்சருக்கும், எம்.பிக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தமிழக முதல்வரின் சார்பில் இவர்கள் நவீன் பட்நாயக்குக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகத்தை பரிசாக வழங்கினர். முதல்வர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய அழைப்பு கடிதத்தையும் நவீனிடம் கொடுத்தனர். சிறிது நேரம் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி தமிழக முதல்வரின் முன்னெடுப்புக்கு ஆதரவு கோரினர்.
முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிக்கு தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என கூறிய நவின் பட்நாயக், கூட்டத்தில் பிஜூ ஜனதா தளம் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என உறுதி அளித்தார்.
இதுபோல தெலங்கானா மாநிலத்திற்கு அமைச்சர் கே. என். நேரு சென்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.