விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது, கட்சி நிர்வாகி ஒருவர் பாமா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்க வந்தார்.
அப்போது ராஜேந்திர பாலாஜி, யாருக்குடா பொன்னாடை, ஆள் பார்த்து போடுறியா என கேட்டு, அந்த நிர்வாகியை கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் விழாவே பரபரப்புக்கு உள்ளானது.
இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசினார். அவர் பேசியதாவது:
மாபா பாண்டியராஜன் அதிமுகவை காட்டிக்கொடுத்தவர். நான் அதிமுகவில் குறுநில மன்னர் தான். எனக்கு வரலாறு இருக்கு. உனக்கு என்ன வரலாறு இருக்கு. உன்னை தொலைத்து விடுவேன். நீ செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க நான் பைத்தியக்காரன் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. எடப்பாடிக்கு அதிமுகவுக்கு உள்ளேயும் , வெளியேயும் குழிபறிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கு.
அதிமுகவை காட்டிக்கொடுத்தவருக்கு பொன்னாடை அணிவித்தால் நான் சும்மா விட்டு விடுவேனா?
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் புகார் அனுப்பி உள்ளனர்.