அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வனங்களில் வாழக்கூடிய புள்ளிமான் மற்றும் மயில் போன்ற வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில், குருவாலப்பர் கோயில் கிராமம் அருகே உள்ள ஓடையில் இருந்து, சாலையை கடக்க முயன்ற 3 வயது புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு, கொம்பு மற்றும் கால்களில் பலத்த காயத்துடன் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த ஆண் புள்ளி மாணை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்கு
கொண்டு சென்றனர். வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, புள்ளிமான் மீது விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், வனங்களில் உள்ள விலங்குகளுக்கு உரிய தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்து தந்தால், இது போன்று தண்ணீர் மற்றும் உணவை தேடிவரும், வன விலங்குகள் வருவது குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.