கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக கூடடணி அமைத்து போட்டியிட்டது. இரு கட்சிகளும் தோல்வியடைந்தன. இந்த நிலையில் இதுவரை எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் பாஜகவுடன் தங்களுக்கு எந்த உறவும் இல்லை என்று கூறி வந்தார்.
ஆனால் அதிமுகவில் எடப்பாடிக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என நெருக்கடி கொடுத்து வந்தனர். நேற்று கோவையில் நடந்த வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசுவதையே பெரும் பாக்கியமாக கருதி அனைவரும் அவரை கைகுலுக்கி வரவேற்று பேசினர்.
அப்போதே திருமண விழாவில் பங்கேற்றவர்கள், அதிமுக, பாஜக கூட்டணிக்குஅச்சாரம் போடப்பட்டு விட்டது என கருத்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்த அமித்ஷாவை வேலுமணி சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சேலம் ஆத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதை சூசகமாக குறிப்பிட்டார்.
அவரது பேட்டியில் கூறியதாவது:
திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக இருக்கிறது. எங்களின் ஒரே எதிரி திமுகதான், மற்ற கட்சிகள் இல்லை.அதிமுகவின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் 6 மாதத்தில் தெரியும், அதை மறைக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி பேச்சா என்ற கேள்விக்கு 6 மாதம் கழித்து கழித்து வந்து கேளுங்கள். ஓட்டுக்கள் சிதறாமல் திமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம். உங்க வியூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடியின் இன்றை பேட்டியை பார்த்த அரசியல் நோக்கர்கள் எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகி விட்டார் என்றே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எடப்பாடியின் இந்த பேட்டி குறித்து கோவையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, அதிமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து அவசரமாக கூறமுடியாது, நாளை மாலை பத்திரிகையாளர்களிடம் விரிவாக கூறுகிறேன் என்றார்.