Skip to content

ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா  அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி  ரூ.440 லட்சத்தில்   பூங்கா அமைக்கப்பட்டது. இதில்  ரூ.220 லட்சம்  மானியமாக  வழங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்து  இன்று  திறப்பு விழா நடந்தது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் முதல் சிறு ஜவுளி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,  பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து கரூர், வேலுச்சாமிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான பொது வசதி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது கைத்தறித்துறை அமைச்சர் காந்தி  நிருபர்களிடம் கூறியதாவது:

2015 ம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 3 டெக்ஸ்டைல் யூனிட் அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2.50 கோடி மானியம் தமிழக அரசு பங்குடன் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும். 2021 வரை தொழில் முனைவோர் யாரும் விண்ணப்பம் செய்யவில்லை. இதில் தமிழக அரசு கொடுக்கும் மானியம் இயந்திரம் உள்ளிட்ட  தளவாடங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கை தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மானியம் திருத்தம் அமைக்கப்பட்டு தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளது. இதில் முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் விண்ணப்பம் வந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு  விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம்  முழுவதும் 17 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு , இதில் 8 கரூர் மாவட்டத்தில் தொடங்க  இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.  அதில் ஒன்று இன்று திறக்கப்பட்டது.

பஞ்சுக்கு செஸ் வரி நீக்க வேண்டுமென கரூர் டெக்ஸ்டைல் அசோசியேசன் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து முதல்வரிடம் கூறியதை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டு செஸ் வரி நீக்கப்பட்டது.

டெக்ஸ்டைல்ஸ்  நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக டெக்ஸ்டைல் தொழில் விளங்கி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் கரூர் மாவட்டத்துக்கு  கொடுங்கள்  என்று கேட்கிறார். டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம் 6 கோடியில் கரூரில்  அமைய உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!