இந்தியாவில் வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இது, ஒரு தலைபட்சமானது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மசோதா கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
பாஜ எம்பி ஜகதாம்பிகா பால் தலைமையிலான 26 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு, மசோதாவில் செய்ய வேண்டிய திருத்தம் குறித்து விவாதம் நடத்தியது. பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்பிக்களும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் 67 திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் வழங்கிய 44 திருத்தங்களை கூட்டுக்குழு நிராகரித்தது. ஆனால், ஆளும் பாஜ கூட்டணி கட்சிகள் வழங்கிய 23 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கூட்டுக்குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
கடந்த 13ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், வக்பு வாரிய மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், 23 திருத்தங்களில் 14 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்குகிறது. அப்போது, வக்பு வாரிய திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.