திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி, தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமைச்சர் நேரு பேசியதாவது:
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சென்னை திமுக கோட்டையாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களும், திருச்சியிலும், எப்போதும் திமுக பலமாக உள்ளது. இங்கு எப்போதும் திமுகவின் வெற்றி உறுதியாக உள்ளது.
அது போல கரூர், கோவை மாவட்டங்களை செந்தில் பாலாஜி திமுக கோட்டையாக உருவாக்கி உள்ளார். அவர் சிறையில் இருந்த நிலையிலும், கடந்த மக்களவை தேர்தலில் குளித்தலை தொகுதியில் கரூர் மாவட்ட திமுகவினரின் தேர்தல் பணியை நோில் கண் கூடாக பார்த்தேன். அதுபோல கோவையையும் செந்தில் பாலாஜி திமுக கோட்டையாக உருவாக்கி வைத்து உள்ளார்.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் யார், யாருடன் கூட்டணி வைத்தாலும் நமக்கு கவலையில்லை. திமுக கூட்டணி வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.