செங்கல்பட்டு அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஜிஎஸ் டி சாலை கடந்து மயக்க நிலையில் அப்பகுதிக்கு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் மூடப்படாத கால்வாயில் இருந்த கழிவு நீரில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கால்வாய் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் கால்வாயில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது . மூடப்படாத கழிவு நீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.