மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியஉணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே வந்த குழந்தையை காணவில்லை. அப்போது அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.
அப்போது அங்கன்வாடி கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள சந்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது குழந்தை தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் அங்கன்வாடி மைய கட்டிட வாயில் பகுதிக்கு வந்து சென்றதை பார்த்துள்ளனர்,
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் குழந்தையை அனுப்பி வைத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனையறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் போது குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.