Skip to content

அரசியலில் மீண்டும் குரல்….விஷால் மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்க டிரம்ப் அரசு, அவர்கள் கையில் விலங்கிட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இதனை குறிப்பிடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கையில் விலங்கு கட்டப்பட்டு அதிபர் டிரம்ப் முன் உட்கார்ந்து இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு அளித்த புகாரின் பெயரில் விகடன் குழுமத்தின் இணையதள பக்கம் முடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் தரப்பில் இருந்து, எங்கள் இணையதள பக்கம் முடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் விகடன் குழுமத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என கூறப்பட்டது.

பத்திரிகையாளர்கள் கருத்து  சுதந்திரத்தின் மீது பாஜக அரசு கை வைக்கிறது. இது ஜனநாயக நாடு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது என தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இது குறித்து நடிகர் விஷால் கருத்து வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் :

அதில், சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தையே முடக்கியது ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்குவதற்கு சமம்.

அதேவேளையில் திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பைரசி போன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசை நாம் வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இதுவரை எந்த தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதேபோல் நாட்டில் புழங்கும் பல்வேறு தவறான செயலிகள் மூலம் திரையில் சக நடிகர், நடிகைகள் மற்றும் மூத்த கலைஞர்கள் பற்றி தவறான செய்திகளை பொய்யாக பேசி பரப்புவதும், சமூகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு இன்பம் காணும் ஒரு குறுகிய மனம் படைத்த கும்பலை கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற நடவடிக்கைகள்?

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனம் குறித்து எடுக்கப்பட்ட வெகு வேகமாக நடவடிக்கை போல், நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருபவர்கள் மீதும் திரைப்படங்கள் பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பபட்டால் நன்றாக இருக்கும்.” என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் சினிமா துறையையும் தாண்டி அவ்வப்போது பொது நிகழ்வுகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். முன்னதாக 2017 ஆர்.கே.இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் அவ்வப்போது அரசியல் களத்தில் எட்டிப்பார்த்து வருகிறார் விஷால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நண்பராக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, கள்ளகுறிச்சி விஷ சாராய விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பது என தனது கருத்துக்களை தயக்கமின்றி தெரிவித்து வருகிறார் விஷால். அது போல தற்போது விகடன் இணையதள முடக்கத்திற்கும் மத்திய அரசை வெளிப்படையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால் .

error: Content is protected !!