திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்ட பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர்; மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் அரசுப் பேருந்துகளில் இதுவரை 620 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர்.
மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்கள் ரூ.900 வரை சேமிக்கின்றனர். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. பெண் கல்வி மேம்பாட்டிற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.