திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள G – கார்னர் பகுதியில், சர்வீஸ் சாலை இருவழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் கருப்பு பகுதியாக (Black spot) சுட்டிக்காட்டப்படுகிறது.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக ரயில்வே – பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்ற முக்கியமான சந்திப்பாகவும் இந்த சாலை உள்ளது.
இதுவரை விபத்துகளால் 7 மனித உயிர்கள் பறிபோயிருக்கும் இந்தப் பகுதியில் தினம் தினம் விபத்துகளும், காயங்களும், தப்பித்து உயிர்ப்பிழைப்பதும் வாடிக்கையாக நிகழ்வதை தவிர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் அங்கு சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதற்கு தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடந்த
11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் G – கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நான் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை அளித்திருந்ததையும் சுட்டிக்காட்டி பேசினேன்.
அதன் அடிப்படையில், கடந்த (25.01.2025) அன்று தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டேன்.
ஏற்கனவே எனது கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுரங்கப்பாதைக்கான திட்ட வரைவை தயாரித்துவந்திருந்தார்கள். அதை ரயில்வேத் துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
எனது ஒருங்கிணைப்பில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக் காவல் ஆகிய மூன்று துறை அதிகாரிகள் சேர்ந்து ஒருமித்த உணர்வோடு இந்த சுரங்கப்பாதை அமைப்பதகான பணிகளை தொடங்கினோம்.
அப்போது அந்த மூன்று துறைகளின் அதிகாரிகளுடன் நான் பேசுகையில், இப்பணி முழுமையான தீர்வை எட்டி சுரங்கப்பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நான் ஒன்றிய அமைச்சரை சந்திப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கியிருந்தேன்.
அதன் அடிப்படையில், இன்று பகல் 12 மணியளவில் மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் . நிதின் கட்கரியை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன்.
நான் அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கும் போது, தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடனிருந்தால் எனது கோரிக்கை வலிமை பெறும், முதன்மை பெறும் என்று சிந்தித்து தலைவரிடம் ஒப்புதல் கேட்டேன். மக்களுக்கு நல்லதென்றால் மறுப்பவரா அவர். உடனே ஒப்புக்கொண்டார்.
தலைவரும் நானும் அமைச்சரை சந்தித்து கீழ்காணும் கோரிக்கை கடிதத்தை வழங்கி அதை அவசரமாக நிறைவேற்றித்தரவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தேன். மேலும் திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிட வழிவகை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு நிச்சயம் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
திருச்சி G – கார்னர் பகுதியில் வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு, அது விபத்தில்லா பகுதியாக மாறி, மக்கள் பாதுகாப்புடன் பயணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு அதற்கான என பணி தொடரும்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.