Skip to content

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும் வீட்டில் கடந்த ஜனவரி 9ம் தேதி 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் கொள்ளை போன வழக்கில் சோலாப்பூரைச் சேர்ந்த குற்றவாளி பஞ்சாக்ஷரி எஸ்.சுவாமி (37) என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதரங்களின் அடிப்படையில் எஸ்.சுவாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவனிடம் இருந்து 181 கிராம் தங்க பிஸ்கட்டுகள், 33 கிராம் வெள்ளி ஆபரணங்கள், ஒரு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடந்த 2003ம் ஆண்டில் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் எஸ்.சுவாமி ஈடுபட்டு வந்தார். கடந்த 2009ம் ஆண்டு வாக்கில் தான், முழு நேர திருடனாக மாறினான். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளான். கடந்த 2014-15ம் ஆண்டில், நடிகை ஒருவருடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த நடிகைக்கு கொல்கத்தாவில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளான். மேலும் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் பண்ணையை அமைத்து கொடுத்துள்ளான். இருந்தும் அவன் மீதான திருட்டு வழக்குகள் இருந்ததால், பல மாநில போலீசாரும் அவனை தேடி வந்தனர். கடந்த 2016ம் ஆண்டில், குஜராத் போலீசார் எஸ்.சுவாமியை கைது செய்தனர்.

அதனால் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்தான். பின்னர் மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த எஸ்.சுவாமி, பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தான். சில மாதங்களில் கர்நாடகாவில் தனது திருட்டு, கொள்ளை தொழிலை மீண்டும் தொடங்கினார்.  பெலகாவியிலும் எஸ்.சுவாமி மீது திருட்டு வழக்கு உள்ளது. தனது காதலியின் மூலம் எஸ்.சுவாமிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

கராத்தேவில் பிளாக் பெல்ட் வைத்திருக்கும் எஸ்.சுவாமிக்கு சில நடிகைகளுடன் தொடர்பு இருந்துள்ளது. திருட்டு, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய பின், தன் மீதான சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக புதுப்புது ஆடைகளை மாற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவான். அவரது தந்தை இறந்த பிறகு எஸ்.சுவாமியின் தாய்க்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. தற்போது தனது தாயின் பெயரில் ஒரு வீட்டை வைத்திருந்தார். அதுவும் கடன் பெற்று வாங்கிய வீடு என்பதால், கடனை முறையாக செலுத்தாததால் அந்த சொத்துக்கான ஏல அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த எஸ்.சுவாமி, நடிகைக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்த விவகாரம், அந்த நடிகைக்கும் கொள்ளைக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் அந்த நடிகையையும் பிடித்து விசாரிப்போம்’ என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!