டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. டில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டி ல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பே தேர்தல் வேலையை தொடங்கினார். அவருக்கு துணையாக டெல்லி முதல்வர் அதிஷி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்சிங், டில்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவும் அங்கு ஆம்ஆத்மியை ஆதரித்து பிரசாரம் செய்தார். மறுமுனையில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வீதிவீதியாக பிரசாரம் செய்தனர்.
இதற்கு முன்…
2015
ஆம்ஆத்மி 67
பா.ஜ 3
காங்கிரஸ் 0
2020
ஆம்ஆத்மி 62
பா.ஜ 8
காங்கிரஸ் 0
ஈரோடு
காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக, பாஜக விலகியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்த வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் வெளியேறினர். இதையடுத்து நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 53 இடங்களில் 237 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
டில்லியிலும், ஈரோடு கிழக்கிலும், வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் அவை எடுத்துச்செல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு வாக்குகள் 8ம் தேதி காலை சித்தோடு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.