Skip to content
Home » தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது. எனவே பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய கல்லூரி அதிகாரி, குறிப்பிட்ட எண்ணில் மர்ம நபர் கேட்ட விவரங்களை பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி அதிகாரியின் கிரடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த நம்பரை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

மற்றொரு சம்பவம்
இதேபோல் பட்டுக்கோட்டை மணிபட்டினம் பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக பலரிடம் சொல்லி வைத்திருந்தார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள். உங்களுக்கு விசா வாங்கித் தருகிறேன். மருத்துவ சான்றிதழும் தயார் செய்து கொடுக்கிறேன் என பேசி இணைப்பை துண்டித்தார். இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை . விசாவும் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் குறிப்பிட்ட நம்பரை தொடர்பு கொண்டு பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப் -இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!