முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சென்னையில் எம்.ஜி. ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், தமிழ் மகன் உசேன், கே்.பி. முனுசாமி, செம்மலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்டசெயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், ” நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமாம் அதிமுக கண்டு, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம்!” என்று அதில் பதிவிட்டிருந்தார்.