வரும் நவ., 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது முதல்வர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கோவை வந்த பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்டம் என கட்சி நிர்வாகிகளை வைத்து மூன்று கூட்டங்களை, தனித்தனியாக நடத்தினார். இந்த கூட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது.. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சரியாக கோவையில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் இந்த வெற்றி முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வில்லை. காரணம் சில பூத்துகளில் திமுகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. சில இடங்களில் திமுகவிற்கு 3 இடம். இந்த நிலை ஏன்? என்பது உங்களுக்கு தெரியும். பணிபுரியாத பூத் ஏஜெண்டுகளை மாற்ற கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. மேலும் கட்சிக்கு துரோகம் செய்யும் நபர்களை கட்சி மேலிடம் கவனித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் கோவை வரும் தலைவர் நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது லோக்சபா தேர்தலின் போது நடந்தது என்ன? என்பதனை வெளிப்படையாக கூறுங்கள். 2026 தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.