அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834 என்ற இணைய எண் மூலம் தொடர்பு கொண்டு, wavefx என்ற வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர். பின்னர் பல்வேறு இணைய எண்களில் இருந்து தொடர்பு கொண்டும், support@wavfex.com ,naveenku@wavefx.com ஆகிய mail id களிலிருந்து வாதியை தொடர்பு கொண்டு clients.wavefx.com இந்த இணையத்தில் கருணாமூர்த்தியை பதிவு செய்ய சொல்லி சிறிது சிறிதாக பல்வேறு வங்கி கணக்குகளில் ரூபாயை 71,28,770 பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து கருணாமூர்த்தி 14.05.2024 அன்று அரியலூர் மாவட்ட இணையக் குற்ற காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இணைய குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும்
இணைய குற்றப்பிரிவு பொறுப்பு) வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான சைபர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். தீர புலன் விசாரணை செய்ததில் எதிரி 1. ரியாஸ் கான் (27), கருணாநிதி நகர்,பொத்தனூர் கோயம்புத்தூர். 2 ரம்யா (28), அண்ணமா நாயக்கர் தெரு, குனியமுத்தூர்,
3.மகேஸ்வரி(47) சாஸ்திரி நகர் மூன்றாவது தெரு, பாப்பநாயக்கன்புதூர், கோயம்புத்தூர் ஆகிய மூவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து,23.10.2024 இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து மொபைல் போன்கள்-4, மடிக்கணினி-1, பேங்க் பாஸ்புக் -2, ஏடிஎம் கார்டுகள்-4, செக் புக் 2, சிம் கார்டுகள்- 4, போலி முத்திரை சீல்கள்-4, பணம் 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோன்று சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறும் யாரையும் நம்பி பணம் அளிக்க வேண்டாம், இணைய மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள்,OTP யை யாரிடமும் கூற வேண்டாம்.- அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு போலீசார்.