கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் வாரத்திற்கு இருமுறை தெருநாய்கள் கடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து வருவது வழக்கமாகி உள்ளது.
மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் துரத்தி செல்வதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேற்கு தெரு பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சார்ந்த ஜியாவுதீன் என்ற நபர் ஆடுகள்
வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வெறிநாய்கள் இரண்டு ஆட்டுக்குட்டிகளை கடித்து இரண்டு ஆடுகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்குள் 11 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்ததில் உயிரிழந்ததாக கூறி ஆவேசம் அடைந்த நபர் பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு உயிரிழந்த ஆட்டுக்குட்டியை வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் உயிரிழந்த ஆட்டுக்குட்டியை நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.