தமிழகத்தில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லட்சதீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்.05) ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சிவகங்கை , புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும், நாளை(அக்.6) நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று முதல் 6 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.