Skip to content
Home » போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா(44.) இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர்.
இவர் கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவெறும்பூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினோம். எங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று தருவதாக கூறி குளித்தலை அருகே உள்ள கோட்டை மேடு கடைவீதி தெருவில் வசித்து வரும் பழனியப்பன் மகன் ராஜா( 40.)என்பவர் அறிமுகமானார்.
இதன் மூலம் அவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நான் கடந்த ஏப்ரல் மாதம்
கார் வாங்க நினைத்தேன்.ராஜா என்னிடம் அவருக்கு தெரிந்தவரை அழைத்து வந்து ஹூண்டாய் க்ரிட்டா நன்றாக இருக்கும் என்று சொல்லி என்னிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்.
நானும் அவரை நம்பி கையெழுத்து போட்டேன்.
பின்னர் கார் வாங்கும் முடிவை மாற்றிக் கொண்டேன். ஆவணங்களை கேட்டேன் அவர் தருகிறேன் என்று சொன்னார்.
இந்நிலையில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எனது வீட்டிற்கு வந்த அலுவலர்கள் ( ஹூண்டாய் க்ரிட்டா ) கார் தவணைத் தொகை செலுத்துமாறு கூறினர்.
நான் கார் வாங்கவில்லையே என்றேன்.
பின்னர் தான் தெரிந்தது என் பெயரில் ராஜா மோசடியாக எனது ஆவணங்களை பயன்படுத்தி கார் வாங்கி இருப்பதும், தவணைத்தொகையை கட்டாததும் தெரியவந்தது.
இதனை அடுத்து ராஜாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எனது வீட்டிற்கு வந்த ராஜா என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
என்னை ஏமாற்றி மோசடி செய்து எனது ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக கார் வாங்கி தவணைத் தொகை கட்டாத ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதனை அடுத்து விசாரணை செய்த குளித்தலை சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ராஜா மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
கைது செய்யப்பட்ட ராஜா மணப்புரம் பைனான்ஸில் வாங்கிய ஹூண்டாய் கிரிடா காரை திருச்சியில் அடகு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோல பல இடங்களில் ராஜா கை வரிசை காட்டி மோசடி செய்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராஜா குளித்தலை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை குழு நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!