புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். இக்கோயில் தென் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிந்தா
கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
தங்கள் வயல்களில் விளைந்த கம்பு, சோளம், நெல் ஆகியவற்றை இறைவனுக்கு காணிக்கையாகவும் செலுத்தி வருகின்றனர். பள்ளிகள் காலாண்டு விடுமுறை அளித்ததை ஒட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், கடலூர், திருச்சி, ஆத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைப் போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்து வருகின்றனர்.