மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜர்ஜ் அமர்வு , செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். இந்த பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.
