மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏற்கத்தக்க நிகழ்வு அல்ல. பாஜக இந்திய ஜனநாயக அமைப்பை மாற்றி அழிக்கும் நோக்கில் இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அறிவிப்பால் நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில அரசுகளின் அதிகார பறிப்பு என்பவை மேலோங்கும்.
தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபராதம் விதித்த இலங்கை அரசு அவர்களுக்கு மொட்டை அடித்தது தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழகத்திற்கான அவமானம் அல்ல இந்தியாவுக்கான அவமானம். மொட்டை அடிப்பதற்கு அவர்களுக்கு யார் சட்டரீதியான அதிகாரம் கொடுத்தது? தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்நாட்டு மீன் வர்த்தகமும் வெளிநாட்டு ஏற்றுமதி மீன் வர்த்தகமும் பாதிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த சர்வதேச விதி மீறலை கண்டிக்கும் விதமாக இலங்கை தூதரை நேரில் வரவழைத்து நம்முடைய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் தனது துறையை சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம். நடிகர் விஜய் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தது வரவேற்கக் கூடிய நிகழ்வுதான். பெரியார் இல்லாமல் அரசியல் இல்லை என்பதை விஜய் மிக நன்றாக புரிந்து வைத்துள்ளார். எனவே அரசியலில் இருந்து பெரியாரை ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வக்ஃபு வாரிய தலைவராக அரசியல் சார்பற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்றோரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தமீமுன் அன்சாரி கூறினார்.