கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் ஜெயசூர்யா. இவர் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்குக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சிறுமியையும், ஜெயசூர்யாவையும் தேடி வந்தனர். இவர்களை பல இடங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் 2 பேரும் பெங்களூரில் உள்ளதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திறு சென்ற தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து கையும் களவுமாக 2 பேரையும் பிடித்தனர். மேலும் சிறுமியையும் மீட்டனர். பின்பு, சங்கராபுரம் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்த தனிப்படை போலீசார் சிறுமியைக் கடத்திச் சென்ற ஜெயசூர்யாவிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த விசாரணையில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பெங்களூருவிற்கு நண்பர்கள் உதவியுடன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமியை அழைத்துச் சென்ற ஜெயசூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயதுடைய சிறுமையை போலீசார் அறிவுரை கூறி அவருடைய தாயிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.