Skip to content

வேளாண் மண்டலத்தை பாதுகாக்க…. நடைபயணம்…..24ம் தேதி தொடக்கம்

  • by Authour

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையில் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும், விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்,

காவிரி படுகையில் நிலத்தடிநீர் தொகுப்பு பாழாகி வருவதை தடுக்க வேண்டும், காவிரி படுகையில் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளின் வயதை நிர்ணயித்து அடிப்படை ஆவணங்கள், செயல்படத் தேவையான அனுமதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து சட்டவிரோத கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும், தொழிலக அனுமதிகள், எண்ணெய் எரிவாயு திட்டங்கள் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்,

எண்ணெய் எரிவாயு திட்டங்களால் காவிரிபடுகை அடைந்த பாதிப்புகள் குறித்து பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வறிக்கை வெளியிட வேண்டும், தமிழக கடற்பகுதிகளில் எண்ணெய் எரிவாயு கிணறுக்குள் அமைப்பதை தடை செய்ய வேண்டும், ஏரி குளம், பாசன கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும், நீர்பாசன கட்டமைப்பு, நீர்மேலாண்மை திட்டங்கள் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி பூம்புகாரில் பரப்புரை நடைபயணம் தொடங்கி சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வழியாக வரும் 29ம் தேதி தஞ்சாவூரில் நிறைவடைய உள்ளது. இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட தோழமை அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!