கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் தேசிய வன தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு வன உயிர்பயிற்சியக அதிகாரிகள் கலந்துகொண்டு வனத் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, வனத்துறை சார்பில் மதுக்கரைப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு மூலம் யானை நடமாட்டங்களை கண்காணித்து பாதுகாத்து
வருவதாகவும் குறிப்பாக ரயில்வே வழித்தடங்களில் யானைகள் பாதிப்படையாத வகையிலும் மனித-யானை மோதல் வராத வகையிலும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக யானையை விரட்டும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். யானைகள் பிளாஸ்டிக் உண்ணும் புகைப்படங்கள் குறித்த கேள்விக்கு, அத்தகைய புகைப்படங்கள் இருந்தால் அனுப்பி வைக்குமாறும் அது எந்த பகுதி என்று கண்டறிந்து வனத்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்கப்படும் என்றும் கூறினார். புதிதாக அறிமுகமாகியுள்ள உபகரணங்களை வனத்துறைக்காக வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
யானை வழித்தடங்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் மக்களுக்கு பிரச்சினை இல்லாமலும் அதேசமயம் யானைகளுக்கும் பிரச்சனை இல்லாமலும் யானை வழித்தடத்தை நிர்ணயிக்கும் பணிகளை வனத்துறை செய்து வருவதாகவும் கூறினார். வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் ரிசாட்டுகள் செயல்படுவது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.